ஒரு நாட்டில் வாழுகின்ற அனைத்து விதமான
மக்களும் சாதி, மத, மொழி, நிற, கலாசார வேலிகளை
தாண்டி ஒற்றுமையாய் ஒரு தாய் பிள்ளை போல் அன்புடனும் புரிந்துணர்வுடனும் வாழ்தலை சமூக
நல்லுறவு அல்லது சமூக நல்லிணக்கம் என வரைவிலக்கணப்படுத்தலாம். நல்லுறவு என்பதன் ஆங்கில
பதம் "Harmony" ஆகும். இது ஒத்திசைவு, உடன்பாடு என பொருள்படும். "சமூக
நல்லுறவு என்பது முரண்பட்டு நிற்பவர்களுக்கிடையே காணப்படும் வன்மம், மனக்கசப்பு விரோதம்
என்பவற்றிற்கு பதிலாக நட்புறவு, தோழமை என்பவற்றை விதைப்பதாகும்" என அறிஞர்கள்
வலியுறுத்துகின்றனர். சமூக நல்லுறவு என்றால் என்ன என்பதை பற்றி பின்வருமாறு அறிஞர்கள்
வரைவிலக்கணப்படுத்தி உள்ளார்கள்.
• சமூக நல்லுறவு என்பது முரண்பட்டு நிற்பவர்கள்
இடையே காணப்படும் வன்மம், மனக்கசப்பு, விரோதம் என்பவற்றிற்கு பதிலாக நட்புறவு தோழமை
என்பவற்றை ஏற்படுத்துவதாகும் "என்றனர்( லுக் ரெயிச்யர் மற்றும் தினியா பப்பென்ஹோல்ஸ்)
• “மக்கள் மனதில் ஏற்படும் சமயம் சார்ந்த
இரக்கம் நல்லிணக்கம் ஆகும்” என்றார். (ஜோன் போல் லேட்றச்)
மின்னல் வேகம்தனில்
சுழலும் உலகில் சமூக நல்லுறவு என்பது காலத்தின் தேவையாக உள்ளது.
அந்த வகையில்
மனித விழுமியங்களும் சமூக நல்லுறவு வளர்ச்சியில் பாரிய வகிபாகத்தை மேற்கொள்கின்றன.
மனிதனுடைய நம்பிக்கைகள், எண்ணங்கள், கருத்துக்கள் என்பவற்றின் உருவாக்கத்தின் அடிப்படையில்
அமைந்துள்ளதே விழுமியம் (Value) எனப்படுகின்றது. விழுமியங்களை நேர்மையுடன் பயன்படுத்துவதே
அவற்றின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துகின்றது. தற்காலத்தில் உலகளாவிய ரீதியில் அரசியல்
தலைவர்களும், சமய தலைவர்களும், ஏன் சாதாரண அடிமட்ட மனிதர்களுக்கிடையிலும் கூட மனித
விழுமியம் என்பது பேசப்படும் பொருளாக காணப்படுகின்றது. ஏனெனில் சிதரிச் செல்லும் சமூக
நல்லுறவை கட்டிப் பாதுகாக்கும் ஒரே ஆயுதமாக திகழ்வது மனித விழுமியங்களே ஆகும். மனித விழுமியங்கள் ஒன்று இரண்டு அல்ல. பல காணப்படுகின்றன.
பொதுவாக சில
மனித விழுமியங்களை பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.
1. ஒற்றுமை
2. விட்டுக்
கொடுப்பு
3. உதவி செய்தல்
4. பிறரை மதித்தல்
5. தியாகம்
6. நம்பிக்கை
7. நட்பு
8. நேர்மை
9. இரக்கம்
10. நீதிக்கு
கட்டுப்படல்
இவ்வாறான
சில மனித விழுமியங்கள் காணப்பட்டாலும் ஒற்றுமை மற்றும் விட்டுக் கொடுப்பு ஆகியன மனித
சமூக நல்லுறவுக்கு எவ்வாறு செல்வாக்கு செலுத்துகின்றன என்பதனை விரிவாக நோக்குவோம்.
ஒற்றுமை
மனித விழுமியங்களில்
அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த விருமியமாக ஒற்றுமை கருதப்படுகின்றது."ஒன்றுபட்டால்
உண்டு வாழ்வு" , "அடம்பன் கொடியும் திரண்டால் மிடிக்கு", "எறும்பூற கற்குழியும்", "ஒற்றுமையை பலம்" போன்ற பல்வேறுபட்ட முதுமொழிகள்
கூறுவது ஒற்றுமையினாலேயே இந்த உலகு இயங்குகிறது என்பது ஆகும்.
ஒற்றுமை என்பது
சாதி, மத வேறுபாடு இன்றி அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுதலை குறிக்கும். இத்தகைய
ஒற்றுமை காரணமாக சமூக நல்லுறவு எவ்வாறு வளர்ச்சி அடைகின்றது என நோக்குவோம்.
ஒற்றுமை மூலமாக மனிதன் அந்நிய மதத்தவருடனும்
சகோதரர்களாக செயற்பட வழிவகுக்கிறது. அனைத்து இனத்தவர்களையும் உள அளவில் எவ்வித வேறுபாடுமின்றி
ஒன்றாக வாழ செயற்படத் தூண்டுகிறது. ஒற்றுமையால் பிணைகையில் செய்ய இயலாதது என்று ஒன்றுமே
இல்லை எனலாம். அதிலும் வேற்றுமையில் ஒற்றுமை காணலானது சமூகங்களுக்கிடையிலான பேதங்களை
நீக்கி சண்டை சச்சரவுகளை ஒழித்து சுமுகமாக
வாழ வழிவகுக்கும். இதனையே அமெரிக்க அரசியலமைப்பு திட்டமும் வலியுறுத்துகிறது.
" புத்தே
ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே- ஒப்புரவில் நல்ல
பிற" என்கிறார் பொய்யாமொழி புலவர் திருவள்ளுவர்.
அதாவது ஒற்றுமையைப் போன்ற சிறந்த வரம் ஒன்றை தேவ உலகத்திலும் கூட பிற முடியாது எனப்படுகின்றது.
இத்தகைய சிறப்புமிக்க
ஒற்றுமையானது சமூகநல்லுறைவை உயிர்ப்பித்தமையை அண்மை காலத்தில் நம் தாய் நாட்டில் நிகழ்ந்த
நிகழ்வுகளைக் கொண்டு கண்டறியலாம்.
இரும்பு
வேலிகள், நீர்த்தாரை பிரயோகங்கள், தடியடிகள் மற்றும் தோட்டாக்களையும் தாண்டி இலங்கை
வாழ் அனைத்து மக்களும் இன, மத, மொழி வேறுபாடு
இன்றி ஒற்றுமையாய் பிணைந்து தங்களை தகர்த்திய ஆட்சியை விரட்ட செயல்பட்டனர். ஒற்றுமையின்
அக்கினி சுடர்களாக இணைந்த மக்கள் கூட்டம் வெற்றியை கண்டதை இந்த உலகத்திற்கு ஒற்றுமையின்
வலிமையை உணர்த்தியது என்றே கூறலாம். காலி முகத்திடையில் பௌத்த, இஸ்லாமிய, இந்து, கிறிஸ்தவ என வேறுபாடு எதுவும் இன்றி ஒற்றுமையாக
தமது மார்க்க விடயங்களை மேற்கொண்டமையும் ஏனைய மதத்தவர்கள் அதற்கு அனுசரணை வழங்கியமையும்
கண்கொள்ளாக் காட்சியாக காணப்பட்டது.
இது மாத்திரமன்றி
காலிமுகத்திடையில் இருந்த தமது சகோதரர்களுக்கு காடையர்களால் நிகழ்த்தப்பட்ட அடிதடியின்
போது ஈசல் போன்ற சணக்கூட்டம் மிகவும் குறைந்த நேரத்தில் கொழும்பிற்கு திரண்டதனையும்
இந்த ஒற்றுமையின் வெளிப்பாடே எனலாம்.
இவ்வாறாக
ஒற்றுமையினால் சமூக நல்லுறவு வளர்ச்சி அடைந்துள்ளமையை உள்நாட்டு சான்றுகள் மூலமாகவே
அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற கணியன்
பூங்குன்றனார் விளக்கத்திற்கு அமைவாக உலகில் வாழும் அனைவரும் ஒரே ஊரினரே, உலகில் வாழும்
அனைவரையும் ஒரே உறவினர்களே என்ற கொள்கையின் கீழ் நாம் வாழும் போது சமூக நல்லுறவு மென்மேலும்
வளர்ச்சியடையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
விட்டுக்
கொடுப்பு
விட்டுக்கொடுப்பு
சமூக சக வாழ்வின் அடிப்படை அம்சமாக கருதலாம். தமக்கான உரிமை, தேவை, ஆசை, அதிகாரம் போன்றவற்றை
பிறரின் நலனுக்காக நாம் விருப்பத்துடன் சமநிலைப்படுத்தும் ஓர் பண்பு விட்டுக் கொடுத்தல்
என வரையறை செய்யலாம். பிரச்சனைகளை தீர்க்கும் அணுகு முறையில் முக்கிய விடயமாக இந்த
விட்டுக்கொடுப்பு திகழ்கிறது. விட்டுக் கொடுத்தல் மூலம் எவ்வித இழப்பும் ஏற்படுவதில்லை.
மாறாக நாம் எதிர்பார்த்ததை தாண்டிய சிறப்பானதொரு விடயம் எதிர்காலத்தில் நமக்கு கிடைக்கும்
என்பதில் எவ்வித அச்சமும் இல்லை. இதுவே இயற்கையின் நியதியும் கூட.
"விட்டுக்கொடுத்தவன்
வீழ்ந்ததும் இல்லை; தட்டிப் பறிப்பவன் வாழ்ந்ததும் இல்லை" என நமது முன்னோர்கள்
கூறிய அந்த ஆழமான கருத்தை நோக்கும்போது பிறரிடம் பறித்து எடுத்து இன்பமாக வாழ்பவர்களுக்கு
தற்காலிக மகிழ்ச்சியே கிடைக்கும். மாறாக விட்டுக் கொடுத்து வாழ்கின்ற மனிதனுக்கு எக்காலத்திலும்
எவ்வித வீழ்ச்சியும் இன்றி வாழ்வில் முயற்சியை அடைந்து வாழ முடியும் என்பது நிதர்சனமே.
விட்டுக்கொடுத்தல்
சமூக நல்லுறவுக்கு எவ்வாறு வழி செய்கிறது? மனிதனானவன் தனித்து வாழ முடியாத ஓர் சமூகப்
பிராணி ஆவான். அவன் மனிதனோடு ஒன்று கூடி வாழ பழகியுள்ளான். அந்த வகையில் பல் சமூகம்
கூடி வாழும் ஒரு சமூகத்தின் மத்தியில் மனிதனானவன் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து
வாழ்வதின் ஊடாகவே சமூக நல்லிணக்கம் என்பது பூவாய் மலரும்.
பேருந்தில்
பயணிக்கும் போது தான் அமர்ந்திருக்கும் ஆசனத்தை வேற்று மத கர்ப்பிணி தாய் ஒன்றிற்காக
விட்டுக் கொடுத்தலும், வேற்று மத தலைவர் ஒருவருக்கு அவ்வாசனத்தை விட்டுக் கொடுத்தலும்,
வங்கியில் காணப்படும் நீண்ட வரிசையில் தனக்கு பின்னால் இருக்கும் வேற்று மத வயது வந்த
ஒரு நபருக்கு வரிசையில் முன்னிடத்தை விட்டுக் கொடுத்தலும், நண்பர்களுக்கிடையில் ஏற்படும்
சண்டைகளின் போது ஒருவர் விட்டுக் கொடுத்து சமாதானம் அடைவதலும் தினம் தினம் சமூக நல்லுறவுக்கு
உந்து சக்தியாக அமைவதனை நாங்கள் அன்றாடம் கண்கூடாக காணக்கூடியதாக உள்ளது.

பஞ்சபாண்டவர்கள்
வனவாசம் செய்து முடித்த பின் கிருஷ்ணனை துரியோதனனிடம் தூது அனுப்பி தனக்கு உரித்தான
நிலத்தை கேட்க;அவன் முடியாது என்று சொல்ல; இல்லையேல் ஐந்து ஊர் தரும் படி கேட்க; அதுவும்
முடியாது என்று சொல்ல கடைசியாக 5 வீடேனும் தரும் படி கேட்டும் அதையும் முடியாது, ஒரு
தூசு கூட அவர்களுக்கு கொடுக்க மாட்டேன் என துரியோதனன் பிடிவாதம் பிடித்தமையினால் மகாபாரத
போர் நிகழ்ந்து துரியோதனன் உட்பட அவனுடைய முழு குடும்பமும் அழிந்துவிட்டது.அந்த சந்தர்ப்பத்தில்
முழு நாட்டையும் கொடுக்காவிட்டாலும், வெறுமனே ஐந்து ஊரையோ அல்லது ஐந்து வீட்டையோ விட்டுக்
கொடுத்தால் துரியோதனனுக்கு அந்த நிலை ஏற்பட்டிருக்குமா? இது எதனை காட்டுகிறது? விட்டுக்கொடுத்தலின்
அவசியத்தையும் விட்டுக் கொடுக்காவிட்டால் ஏற்படும் விபரீதத்தையும் விளக்குகிறது.
"பட்டுக்
கொடுத்தால் இன்பம் வருமா? நகை நட்டு கொடுத்தால் இன்பம் வருமா? சீர்வரிசை தட்டு கொடுத்தால்
இன்பம் வருமா? இல்லை. விட்டுக் கொடுத்தால்தான் இன்பம் வரும்." என பட்டிமன்ற பேச்சாளர் ஒருவர் அழகாக விட்டுக் கொடுத்தலின்
சிறப்பை எடுத்துக்காட்டுகிறார்.
அந்த வகையில்
நோக்கும் போது நாம் பல் சமூக பல்கலாசார மட்டத்தில்
வாழ்கின்ற சந்தர்ப்பத்தில் வேற்று மத சகோதரர் ஒருவருக்கு எந்தவித தயக்கமும் இன்றி அவரின்
நலனுக்காக மாத்திரம் விட்டுக் கொடுக்கும் போது அவ்விடத்தில் சமூக நல்லுறவு என்பது வளர்ச்சி
அடைகின்றது. அது மாத்திரம் இன்றி இவ்வாறு விட்டுக் கொடுத்ததலின் காரணமாக பிற மதத்தினருக்கும்
நம் மீது ஒரு நம்பிக்கையும் அன்பும் உண்டாவதன் ஊடாக சமூக நல்லுறவுக்கு ஓர் உந்து சக்தியாகவும்
அமைகிறது. அந்த வகையில் நோக்கும் போது சமூக நல்லுறவில் விட்டுக்கொடுப்பு என்பது முக்கியமானதாக
காணப்படுகின்றது. “விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை” என்ற வாசகத்தின் அடிப்படையில்
நாம் அனைவரும் விட்டுக் கொடுத்து வாழ்வதன் மூலம் சமூக நல்லிணக்கத்தை வளப்படுத்தி சிறந்த
ஒரு எதிர்காலத்தை உருவாக்கக் கூடியதாக உள்ளது.
இன்றைய உலகில்
பல்வேறு காரணங்களின் விளைவாக சண்டை சச்சரவுகள், போர்கள் ,இன துவேஷம் என்பவற்றின் காரணமாக
சமூக நல்லுறவானது சீர்குலைந்து வந்துள்ளமையை காண்கின்றோம். அதற்கு ஒரு சிறந்த தீர்வாக
அமைவது மனித விழுமியங்களை வளர்ச்சி அடைய செய்வதை ஆகும் அந்த வகையில் ஒற்றுமை, விட்டுக் கொடுப்பு உள்ளிட்ட பல்வேறுபட்ட மனித விழுமியங்களை
குழந்தை மட்டத்திலிருந்து அனைவரிடத்திலும் வித்திடுவதன் மூலமாக சமூக நல்லிணக்கம் வளர்ச்சி
அடைந்து இந்த உலகம் போரில்லாத ஒரு சமாதான பூமியாக மாறும் என்பதில் எவ்வித அச்சமும்
இல்லை. இவ்வாறு மனித விழுமியங்களை வளர்ச்சி அடைய செய்வதன் ஊடாக சமூக நல்லிணக்கம் உறுதி
அடைவதனால் நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல்
ரீதியிலும் வளர்ச்சி அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.